அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Thursday 10 January 2013

புத்தாண்டு கொண்டாடும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?


கடந்தவாரம் ஜனவரி 1 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பல அனாச்சாரமான அருவருக்கத்தக்க காரியங்கள் அரங்கேறி முடிந்தன. இந்த நிலையில் இத்தகைய காரியங்களில் முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லி கொள்ளக்கூடியவர்களும் கலந்து கொண்டிருப்பது தான் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில் ஆலிம்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளக்கூடிய போலி உலமாக்கள் சிலர் கலந்து கொண்டு கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் மதுரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பெயர்தாங்கி முஸ்லிம் பெண்களில் சிலர் கிறிஸ்த்தவ பாதிரியாரிடத்தில் ஆசிவாங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், கடந்த வாரம் இந்து முன்னனி தலைவர் ராமகோபாலன் விடுத்த அதிரடி அறிவிப்பு ஒன்று அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. கோவில்களில் நடைதிறப்பது என்பதை இந்துக்களின் ஆகமக விதிகளின்படி சூரியன் உதிக்கும் நேரத்தில் தான். அன்று தான் நாளில் துவக்கம் என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதற்கு மாற்றமாக சிலகோவில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தனர். அதைக் கண்டிக்கும் விதமாக இந்துமுன்னனி தலைவர் ராமகோபாலன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

”நமது நாட்டில் நாள் பிறப்பு என்பது சூரிய உதயத்திலிருந்துதான் ஆரம்பமாகும். ஆகவே கோவில் நடைதிறப்பது விடியற்காலை நேரத்தில் தான். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை மூடினால், அடுத்த நாள் விடியற்காலைதான் கோவில் நடை திறக்கப்படும். இது தான் மரபு.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது. இதனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ஆன்மிக பெரியோர்கள் எச்சரித்தும், கோவிலை காட்சிப்பொருளாக்கி கடைவிரித்து காசு பார்க்கிறார்கள்..
நள்ளிரவு நடைத்திறப்பை அறநிலையத்துறை அனுமதிக்கக்கூடாது என்றும், ஆலயங்களில் நள்ளிரவு நடைத்திறப்பது குறித்து அறிவிப்பு வைத்தால் அதனை எதிர்த்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்பது தான் . அந்த அறிவிப்பு
மேற்கண்ட அறிவிப்பை கிறிஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடக்கூடிய முஸ்லிம்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளனர். அர்த்தஜாம பூஜை முடிந்து நடையைச் சாத்தினால், சூரிய உதயத்திற்கு பிறகுதான் நடை திறக்க வேண்டும் என்று தவறான கொள்கையை பின்பற்றக்கூடியவர்கள் கூட அவர்கள் கொண்டகொள்கையில் இந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் நேரத்தில், சத்தியக்கொள்கையில் இருக்கும் நம் சமுதாயம் அதை மற்ற மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய இந்த சமுதாயம் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்று தெளிவான நபிகளாரின் கட்டளையிருந்தும் அதை அலட்சியம் செய்து விட்டு இத்தகைய மார்க்கத்திர்கு முரணான செயல்களில் ஈடுபடுவது சத்தியப்ப்ரச்சாரம் இன்னும் பலரது உள்ளங்களுக்கு சென்றடைய வேண்டியதன் கட்டாயத்தை உணர்த்துகின்றது. இஸ்லாமிய பெயர்தாங்கிகளிடத்தில் இம்மார்க்கத்தின் முக்கித்துவமும், இதன் மகத்துவமும் எடுத்தியம்பும் பணியை நம் ஜமா-அத் இன்னும் வீரியமாக எடுத்துச்செல்லவேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக்காட்டுகின்றன.

0 comments: