இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர். இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)
இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும் மருந்துகைளையும் பயன்படுத்தி தங்களை பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். அல்குர்ஆன் (4 : 119)
உருவத்தில் ஆணாக இருந்து கொண்டு பெண்களைப் போன்று உடை அணிவதையும் அலங்காரம் செய்து கொள்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் . அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி (5885)

