அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Saturday 30 June 2012

சாலையோர கடைகளும்... சுகாதார சவால்களும்...


தொழில், கல்வி, வர்த்தகம், சுற்றுலா என்று வெளியூர் வாழ் வாசிகள் உணவுக்காக உணவகங்களை நாடவேண்டியுள்ளது. பொதுவாகவே அடுத்த மனிதர்களின் மீது அக்கறைப்படும் பண்பு குறைந்துவிட்டது. பிற மனிதர்களின் உடைமை, ஆரோக்கியம் இவற்றை யாரும் பொருட்படுத்துவதில்லை. நகரங்களில் வேலை நிமித்தம் இடம்பெயர்ந்து வருவோர்கள், உணவுத் தேவைக்காக தங்கள் மீது அக்கறையில்லாதவர்களையே நாடவேண்டியுள்ளது. இவ்வாறாக நமது உடலுக்குள் செல்லும் உணவுகளே நமக்கு பலவகையான தீங்குகளைத் தருகிறது.


பெருநகரங்களிலும், நகரங்களிலும் உணவு விற்பனையகங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. அங்கெல்லாம் உணவுப் பொருட்கள் தரமற்றும், சுகாதாரமற்றும் இருப்பதாக சமூகநல ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சென்னையில், அடுமனைகள் (Bakery), உணவங்கள் (Hotels) உட்பட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. இதுதவிர சாலையோரக் கடைகள் 10 ஆயிரத்திற்கும் அதிகம்.
சென்னையில், சாலையோரக் கடைகள் அதிகம் திறக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் தட்டுகள், கரண்டிகள் சுத்தமாக வைக்கப்படுவதில்லை. மிச்சமாகும் உணவுக் கழிவுகளை சாலையோறம் எறிந்துவிட்டும் செல்கின்றனர். இதனால் நகரத்தின் பொது சுகாதாரம் சீர்கெடுகிறது. வாந்தி, பேதி, குடல்நோய்கள் என்று தொற்று ஏற்படுகிறது.
மத்திய மாநில அரசுகள் அத்தியாவசியப் பொருட்களின் மீது விலையேற்றி விடுவதால் நகரங்களில் உணவுப் பொருட்கள் மீதான விலையும் தானாக கூடிவிடுகிறது. இதனால் தரமான உணவகங்களில் சென்று செலவிட முடியாதவர்கள் சாலையோர உணவகங்களை நாடுகின்றனர். இங்கு உணவுப் பொருட்களின் விலை குறைவு. அதேபோல் பொருட்கள் மற்றும் இருப்பிடத்தின் சுகாதாரமும் குறைவு, தரமும் குறைவு.
சாலையோரக் கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த தகுதியான எண்ணெய் பலமுறை உபயோகப்படுத்தப்படுவதால் அந்த உணவுப் பொருட்களின் கலோரி அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது.
அதிக கலோரி கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் வி.கனகசபை. இதற்காக, மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2011-ஐ கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் உணவகங்கள் கடை நடத்த முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். ரூ.12 லட்சத்துக்கு குறைவாக, வருமானம் ஈட்டும் உணவுக் கடைகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறையில் பதிவு பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்பது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு சட்டம். உணவுப் பொருட்களில் கலப்படம், உணவுப் பாதுகாப்பு, உரிமம் பெறுவது, தர நிர்ணயம் இவற்றை தணிக்கைப் பிரிவுகள் கவனித்து வந்ததை இப்போது அனைத்துப் பிரிவுகளும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2011-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி, உணவுப் பொருட்கள் குறித்த தகவல்களை லேபிளில் அச்சடித்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த விதியை கடைப்பிடிப்பதில்லை. கடந்த 2011, ஆகஸ்ட் மாதம் உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த 10 மாதங்களில் சென்னையிலுள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான உணவகங்களில் வெறும் 895 கடைகள் மட்டுமே பதிவு செய்திருக்கின்றனவாம்.

0 comments: