உலக வரலாறு பல்வேறுபட்ட புரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி 14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்பதைக் காணலாம்.
அவர்கள் ஏற்படுத்திய அந்த மகத்தான புரட்சி குறித்து சில விடயங்களை மிகச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டலாம் என எண்ணுகின்றேன்.
உலகம் பல்வேறுபட்ட ஆன்மீகப் போதகர்களைக் கண்டு வருகின்றது. அவர்களில் அனேகர் மக்களின் பக்தியையும் மடமையையும் மூலதனமாக்கி மக்களைச் சுரண்டி வாழ்வதைக் காணலாம். நபி(ச) அவர்கள் ஒரு மாபெரும் ஆன்மீக வாதியாக இருந்த அதேநேரம், தன்னைச் சாதாரண ஒரு மனிதனாகவே அறிமுகப் படுத்தினார்கள்.